சென்னை: 2025 மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அந்த வெற்றியை முன்னாள் வீராங்கனைகளான ஜுலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டாடிய விதத்தைப் பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய ஆண்கள் அணி இது போன்ற மரியாதையை முந்தைய தலைமுறையினருக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை, ஊடகம் முன்பு மட்டும் மரியாதை கொடுப்பது போல பேசுவார்கள் என்று வெளிப்படையாக விமர்சித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. போட்டி முடிந்தவுடன், வர்ணனையாளர் பணியில் இருந்த முன்னாள் கேப்டன்களான ஜுலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோரை மைதானத்திற்கு அழைத்து, கோப்பையை அவர்களிடம் கொடுத்து தூக்கிக் கொண்டாடினர் தற்போதைய வீராங்கனைகள். இந்த நெகிழ்ச்சியான தருணம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின், மகளிர் அணியின் இந்தச் செயலை "நம்பமுடியாத அளவிற்கு அற்புதமான செயல்" என்று புகழ்ந்துள்ளார். "முழு இந்திய அணியும் கோப்பையை மிதாலி ராஜிடம் கொடுத்தது," என்று குறிப்பிட்ட அஸ்வின், "அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? நான் உண்மையிலேயே தலை வணங்குகிறேன். இந்திய ஆண்கள் அணி இதை ஒருபோதும் செய்ததில்லை."
"ஆண்கள் அணி ஊடகப் பயிற்சி பெற்றிருப்பதால், சில சமயங்களில் கேமரா முன்பு மட்டும் சொல்வார்கள். ஆனால், முந்தைய தலைமுறையினருக்கு அவர்கள் உரிய அங்கீகாரம் கொடுத்து நான் பார்த்ததில்லை. 'என் தலைமுறை அணிதான் உங்களை விடச் சிறந்தது' என்ற விவாதங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்" என்று காட்டமாகத் கூறினார் அஸ்வின்.
மேலும் தொடர்ந்த அவர், "ஆனால் இந்த மகளிர் அணி, அங்கே இருந்த அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் ஆகியோரிடம், 'நீங்கள் தூவி, நீரூற்றி வளர்த்த விதைகள் தான் இன்று வெற்றியாளர்களாக நிற்கின்றன' என்று சொல்வதைப் போல, அவர்களிடம் மகிழ்ச்சியுடன் கோப்பையைக் கொடுத்தார்கள். இது நம்பமுடியாத அளவிற்கு ஒரு அற்புதமான செயலாக நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.
"இன்றைய வெற்றி இன்றைய வெற்றி மட்டுமல்ல. இது 25, 30 ஆண்டுகால உழைப்பின் பலன். அதனால்தான் இந்த மகளிர் அணி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அவர்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள். வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போது கூட, முந்தைய தலைமுறை வீராங்கனைகளை நினைவுகூர்ந்து அவர்களுடன் கொண்டாடினார்கள். அதுவும், யாரும் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதைச் செய்யவில்லை, அந்தத் தருணத்தில் தன்னிச்சையாகச் செய்தார்கள்" என்று அஸ்வின் மேலும் கூறினார்.
அஸ்வினின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மகளிர் அணியின் பண்பட்ட செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், ஆண்கள் அணி குறித்த அஸ்வினின் விமர்சனமும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.