மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா முக்கிய கட்டத்தில் பந்து வீசி தென் ஆப்பிரிக்கா வீரர்களின் ரன்களை கட்டுப்படுத்தினார்.
இந்த போட்டியில் மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா இந்த தொடர் முழுவதுமே ஒரு சிறந்த வீரராக இந்திய அணிக்கு விளங்கினார். இதனால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், இந்த வெற்றி எனக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது. நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக கடும் உழைப்பை போட்டு இருக்கிறோம். ஆனால் அதற்கான பலன் அப்பொழுது கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஒட்டுமொத்த தேசமும் எது வேண்டும் என்று நினைத்ததோ, அது தற்போது கிடைத்துவிட்டது.
இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் கடந்த ஆறு மாதம் அவ்வளவு விஷயங்கள் நடந்து விட்டது. ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நான் வெளியே பேசவில்லை. கடுமையாக உழைத்து பயிற்சி செய்தால் நிச்சயமாக நம்மால் ஜொலிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். இதனால் தான் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
எங்களுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்தி களத்தில் பதற்றம் அடையாமல் இருந்தாலே நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியும். இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு பும்ராவும் கடைசி ஐந்து ஓவர்களை வீசிய பவுலர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் வீசும் ஒவ்வொரு பந்திலும் என்னுடைய முழு திறன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். நான் என்றுமே அழுத்தத்தை விரும்புகின்றவன். பயிற்சியாளர் டிராவிட்டுக்கு இதுதான் கடைசி போட்டி. அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் பணியாற்றுவதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். இதுபோல ஒரு பிரியாவிடை தான் அவருக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் தாண்டி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். எங்கள் அணியின் மற்ற நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.