பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக் கோப்பையை வென்ற எந்த ஒரு அணியும் செய்யாத மாபெரும் சாதனையை செய்துள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதுவரை எந்த ஒரு அணியும் டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கோப்பை வென்றதே இல்லை. அந்த அரிய சாதனையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி செய்துள்ளது. இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் வெளிப்படையாக உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று அணிகளை வீழ்த்தியது. கனடா அணியுடனான குரூப் சுற்றுப் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதை எடுத்து ஒரு தோல்வி கூட சந்திக்காமல் இந்திய அணி குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா. அரை இறுதியில் 2022 டி20 உலகக் கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்தை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது. அடுத்து இறுதிப் போட்டியில் இந்திய அணியை போலவே இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத தென்னாப்பிரிக்க அணியை சந்தித்தது.
இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் இந்த உலகக் கோப்பையில் புதிய சாதனை படைக்கப்பட வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட அடையாமல் கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையை ப்[பெற்றது இந்திய அணி.
இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் குவித்து இருந்தது. இதுவே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.