நவி மும்பை: இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த அதே சமயம், மறுபுறம் தோல்வியின் துயரத்துடன் கண்ணீரை மறைத்து நின்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட். இறுதிப் போட்டியில் தனி ஒருவராகச் சதம் விளாசிப் போராடியும், தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாத ஏமாற்றத்துடன், போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் அவர் பேசியது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.
இந்தப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், கேப்டன் லாரா வோல்வார்ட் மட்டும் அசைக்க முடியாத தூணாக நின்று போராடினார். 98 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 101 ரன்கள் குவித்து, இந்திய அணிக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததும் தென்னாப்பிரிக்காவின் வெற்றி நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதியில், தென்னாப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

"இன்று தோற்ற அணியின் பக்கம் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இந்தத் தோல்வியிலிருந்து ஒரு குழுவாக நாங்கள் நிச்சயம் பாடம் கற்றுக்கொண்டு வளர்வோம். இந்தத் தொடரில் நாங்கள் சில மோசமான போட்டிகளுக்குப் பிறகு மீண்டு வந்த விதம் அபாரமானது. நாங்கள் ஒன்று மிகச் சிறப்பாக விளையாடினோம் அல்லது மிக மோசமாக ஆடினோம். நல்லவேளையாக, இந்தத் தொடர் முழுவதும் 'மிகச் சிறப்பாக' விளையாடிய தருணங்களே அதிகம். பல வீராங்கனைகள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டனர். இறுதிப்போட்டி வரை நாங்கள் காட்டிய மனவுறுதியைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்."
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உலகக்கோப்பைக்கு முந்தைய ஒரு வருடம் எனக்குச் சிறப்பாக அமையவில்லை. இந்தத் தொடரின் தொடக்கமும் எனக்குச் சிறப்பாக இல்லை. ஒரு கட்டத்தில், பேட்டிங்கையும், கேப்டன்சியையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முயற்சித்தேன். அது, தொடரின் பிற்பகுதியில் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது."
"டாஸ் வென்று பந்துவீசியது சரியான முடிவு என்றே நான் இன்னும் நம்புகிறேன். ஆடுகளத்தில் பந்துவீச்சுக்குச் சாதகம் இருந்தது. சேஸிங்கில் நாங்கள் நீண்ட நேரம் போட்டியிலேயே இருந்தோம். ஆனால், முக்கியமான தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்தியாவை 350 ரன்களை நோக்கிச் செல்லவிடாமல் தடுத்தது ஒரு அபாரமான முயற்சி. 300 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எட்டக்கூடிய இலக்கு என்று நாங்கள் முழுமையாக நம்பினோம்."
"ஷஃபாலி வர்மா அபாரமாக பேட்டிங் செய்தார். அதுதான் அவரது இயல்பான ஆட்டம் - ஆக்ரோஷமான, அச்சமற்ற ஆட்டம். அதுபோன்ற ஆட்டம் கைகொடுக்கும்போது, எந்த அணியையும் அவரால் காயப்படுத்த முடியும்."
தென்னாப்பிரிக்காவின் மூத்த வீராங்கனை மரிசான் கேப்பிற்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என்ற நிலையில், அவரைப் பற்றி வோல்வார்ட் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "இது அவருக்குக் கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்காக இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஒட்டுமொத்த அணியும் விரும்பியது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் ஒருவருக்குள் இரண்டு வீராங்கனைகள் இருப்பது போன்றவர். அவர் எங்கள் அணியில் இருப்பது எங்களின் அதிர்ஷ்டம்." என்றார் லாரா.