பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பையில் உலகின் முன்னணி பேட்ஸ்மேனும், இந்திய அணியின் மூத்த வீரருமான விராட் கோலி மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவர் இந்த உலகக் கோப்பையில் எடுத்த ஸ்கோர்கள் -- 1, 0, 4, 24, 37, 0 மற்றும் 9 இதுதான். அவர் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 10.71 மட்டுமே.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் லத்தீப் ஏன் விராட் கோலியால் ரன் குவிக்க முடியவில்லை என்பது குறித்து விவரித்து இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த விராட் கோலி, டி20 உலகக்கோப்பையில் ஏன் ரன் குவிக்க முடியாமல் திணறிவருகிறார்? என்ற வித்தியாசத்தை அவர் விளக்கினார்.

குறிப்பாக அரை இறுதி போட்டியில் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார். அது குறித்து பேசிய ரஷீத் லத்தீப், "விராட் கோலி அவரது திட்டத்தை விட்டு விலகிச் சென்று விட்டார். இது பெங்களூர் பிட்ச் கிடையாது. இங்குள்ள பிட்ச்கள் வேறு. இந்த தரையில் பந்துகளை அடித்து ஆட முடியாது. அது அவ்வளவு எளிதல்ல. ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து 171 ரன்கள் தான் எடுத்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு இந்த பிட்ச்சில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அத்தனை எளிதாக இங்கே ரன் குவிக்க முடியாது" என்றார்.
மேலும், அவர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பாராட்டினார், "இந்த அரை இறுதியில் ரோஹித் சர்மா நிறைய கடினமான விஷயங்களை சந்தித்தார். முதலில் டாஸில் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்பு முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விராட் கோலி விரைவில் ஆட்டம் இழந்து விட்டார். போட்டியில் மழை குறுக்கிட்டது. அந்த நேரம் மிகவும் மோசமானது. அம்பயர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும். சூப்பர் சாப்பர் மைதானத்தை விரைவில் சீராக்க வேண்டும். அதன் பின் நாம் மீண்டும் வந்து பேட்டிங் செய்ய வேண்டும். அந்த கடினமான நிலையிலும் ரோஹித் சிறப்பாக ஆடினார்" என்றார் ரஷீத் லத்திப்.