பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தபோது ரோகித் சர்மா செய்த ஒரே ஒரு யுக்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ,ரிஷப் பண்ட், சூரிய குமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அக்சர் பட்டேல், விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.

விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 176 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸ், மார்க்கரம் தலா 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் குயின்டன் டிக்காக் ,ஸ்டப்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து, இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
குறிப்பாக அக்சர் பட்டேல் வீசிய ஒரு ஓவரில் கிளாசன் 24 ரன்களை குவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் வெற்றிக்கு 30 பந்துக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆட்டத்தின் 16 வது ஓவரை வீசிய பும்ரா நான்கு ரன்களில் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த சூழலில் தான் ரோகித் சர்மா ஒரு சிறப்பான யுக்தியை பயன்படுத்தினார். ஆட்டம் வேகமாக செல்ல அது தென்னாப்பிரிக்காவுக்கு தான் சாதகமாக மாறியது. இதனால் போட்டி செல்லும் வேகத்தை குறைக்க வேண்டும் என ரோகித் முடிவு எடுத்தார்.
இதனால் விக்கெட் கீப்பராக இருந்த பண்டிடம், தமக்கு காலில் சிகிச்சை வேண்டும் என மருத்துவர் அழைக்க கூறியிருக்கிறார். இதனை அடுத்து பண்டும், தமக்கு சிகிச்சை வேண்டும் என்று நடுவரிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து போட்டி சில நேரம் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா வீரர்களின் கவனம் சிதறியது. ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவின் உத்வேகம் திடீரென்று இந்திய அணியால் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மீண்டும் போட்டி தொடங்கியவுடன் ஹர்திக் வீசிய முதல் பந்திலே கிளாசென் அவுட் ஆனார். இது குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி, அபாரமாக கிளாசன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா ஆட்டத்தின் வேகத்தை குறைத்து சிறப்பான யுத்தியை கையாண்டதாகவும்,இதன் மூலம் கவனச் சிதறலால் கிளாசன் ஆட்டமிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டத்தில் தான் போட்டி தலைக்கீழ் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பான யுத்தியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்தியா யுக்திகளின் மாஸ்டர் என்பதை நிரூபித்து இருக்கிறது.