மும்பை : டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா இன்று எதிர்கொள்ளும் நிலையில் ரோகித் சர்மா பிடிவாத குணத்துடன் செயல்படுவது நமது அணிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
இந்தியா வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய போது, ரோகித் சர்மா அதற்கு ஒரு பதில் கூறினார். களத்திற்கு ஏற்ப நாங்கள் வீரர்களை தேர்வு செய்து சூழலுக்கு ஏற்ப சரியாக விளையாடுகிறோம் என்று கூறினார்.

இந்த பதில் உண்மை எனும் பட்சத்தில் ரோகித் சர்மா என்று ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அதாவது பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு எதிராக இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும். இறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை இந்திய அணியின் பவுலர்களுக்கு இருக்கின்றது. ஆனால் அசுரத்தனமாக பந்து வீசும் தென்னாப்பிரிக்கா பவுலர்களை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க நிச்சயம் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.
குறிப்பாக பார்படாஸ் பகுதியில் மழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் இருந்தாலே நிச்சயம் பந்து ஸ்விங் ஆகும். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் கையில் பந்து சென்றால் என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகின்றேன். இதனால் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை இந்திய அணி களத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சிவம் துபே ஒரு திறமை வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சர்வதேச தரத்தில் விளையாடும் போது சிவம் துபே பதற்றம் அடைந்து விடுகிறார். அவரால் ஐபிஎல் போல் சுதந்திரமாக விளையாட முடியவில்லை. இதனால் கண்டிப்பாக சிவம் துபே இந்திய அணிக்கு ஒரு கூடுதல் சுமை தான். இதனால் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை சேர்ப்பதே சரியான முடிவாக இருக்கும்.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மா தற்போது பிடிவாதமாக சிவம் துபேக்கு தான் இறுதிப் போட்டியில் வாய்ப்பு என்று இருக்கிறார். மேலும் பைனல் போன்ற போட்டிகளில் பிளேயிங் லெவனை மாற்றினால் சரியாக இருக்காது என்று ரோஹித் சர்மா திட்டவட்டமாக நம்பி வருகிறார். இதேபோன்று சஞ்சு சாம்சனும் திடீரென்று எந்த ஒரு போட்டியும் விளையாடாமல் பெஞ்சை தேய்த்துக் கொண்டு இறுதிப் போட்டியில் வந்து விளையாடு என்று சொல்வது நியாயம் இல்லை என்றும்.
இதனால் வெற்றியோ தோல்வியோ சிவம் துபேவையே பயன்படுத்தலாம் என்று ரோகித் சர்மா முடிவெடுத்திருக்கிறார். பந்து வீச்சில் தற்போது சிராஜும் இல்லை என்பதால் சிவம் துபேவை வைத்து ஒன்று அல்லது இரண்டு ஓவர்களாவது பயன்படுத்த முடியும் என ரோகித் நம்புகிறார். ரோகித் சர்மாவின் நம்பிக்கையை சிவம் துபே காப்பாற்றினால் பிரச்சனை இல்லை. சிவம் துபே சொதப்பினால் இந்தியாவின் தோல்விக்கு இதுவே ஒரு காரணமாக அமைந்துவிடும்.