பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவர் வெற்றிக்கு பின் மைதானத்திலேயே படுத்து விட்டார். அப்பொழுது அவரது கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் மைதானத்தில் விழுந்தது. இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றதோடு, இனி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறோம் என்பதை எண்ணி அவர் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார்.

அதன் பின் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்ற ரோஹித் சர்மா. நேராக தனது மனைவி மற்றும் குழந்தை அருகே சென்றார். அவரது மனைவி ரித்திகா அவரது கன்னத்தை பிடித்து, அணைத்து கண்ணீர் மல்க அவரை வாழ்த்தினார். 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வியால் ரோஹித் சர்மா மிகவும் துவண்டு போயிருந்தார். அவரது மனைவியும் அப்போது சோகத்தில் இருந்தார். அந்த சம்பவம் நடந்து எட்டு மாதங்களில் அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவியின் வேதனைக்கு ஒரு வடிகாலாக கிடைத்து இருக்கிறது இந்த டி20 உலகக் கோப்பை வெற்றி.
தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையுடன் விடை பெறுவதால் ரோஹித் சர்மா உணர்ச்சி பெருக்கில் இருந்தார். பின்னர் அவர் ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். 2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையில் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இந்திய அணிக்கு ஆதரவு அளித்தனர். இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போதும் அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை வெற்றிக்கு ரசிகர்களும் காரணம் என்பதால், அவர் இறுதிப் போட்டியை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். அந்த காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது. விராட் கோலியும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார். அவரும் கண்ணீர் மல்க உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.