மும்பை: இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்று நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் ஒரு நடிகையின் இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இறுதிப் போட்டியில் தங்கள் நாட்டு அணிக்கு ஆதரவளிக்க கிரிக்கெட் ஜாம்பவான்களோ, முக்கியப் பிரமுகர்களோ வராததைக் கண்டு விரக்தியடைந்த நடிகையும், தீவிர கிரிக்கெட் ரசிகையுமான தன்ஜா வூர், வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
கேப் டவுனைச் சேர்ந்த தன்ஜா வூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே உள்ள ஆதரவு வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முதலில் இந்திய ரசிகர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், "இந்தியா, நீங்கள் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட்டீர்கள். என் வாழ்த்துகள் வரவிருக்கின்றன. ஆனால், சில நிமிடங்கள் கொடுங்கள். முதலில் நீங்கள் ஏன் வென்றீர்கள் என்று சொல்கிறேன். காரணம் நீங்கள் தான்" என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தொடங்கினார்.
நவி மும்பை மைதானத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விவிஎஸ் லக்ஷ்மண், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் நேரில் வந்து உற்சாகப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். ஐசிசி அதிகாரிகள், மகளிர் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் என இந்திய கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த ஆதரவும் மைதானத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன் பிறகு தென்னாப்பிரிக்கா பக்கம் திரும்பிய அவரது குரலில் கோபம் வெளிப்பட்டது. "தென்னாப்பிரிக்காவிலிருந்து யார் வந்தார்கள்? நீங்கள் கொண்டாடும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர்கள் எங்கே? ஓ... இந்த நிகழ்வு அவர்கள் பங்கேற்கும் அளவுக்கு இல்லையா?" என்று அவர் விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.
அவரது விமர்சனம் அத்துடன் நிற்கவில்லை. "எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கூட இறுதிப் போட்டிக்கு வராதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று அவர் வேதனைப்பட்டார்.
தென்னாப்பிரிக்க வீராங்கனைகளின் கடின உழைப்பைப் பற்றிப் பேசும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். "அந்தப் பெண்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள். அவர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், முக்கியமானவர்கள் யாரும் வராதபோது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நாங்கள் தோற்றுவிடுவோம் என்று அவர்கள் நினைத்தார்களா? அப்படியான ஒரு செய்தியைத் தான் அவர்கள் அனுப்புகிறார்களா?" என்று அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, மீண்டும் இந்தியா பக்கம் தனது பேச்சைத் திருப்பிய தன்ஜா வூர், இந்தியாவின் ஈடு இணையற்ற கிரிக்கெட் கலாச்சாரத்தையும், ரசிகர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவையும் பாராட்டினார். "நீங்கள் இந்த விளையாட்டை வாழ்கிறீர்கள், சுவாசிக்கிறீர்கள். அதுதான் உங்கள் காலை, மதிய, இரவு உணவு. நீங்கள் தான் இந்த உலகக்கோப்பையின் வெற்றியாளர்கள். உங்களுக்கு அது தகுதியானதும் கூட" என்று கூறி இருக்கிறார்.