அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்து மூலம், அதன்தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோசமான தோல்வி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகும்.
188 ரன்கள் இலக்கை துரத்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 18.5 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷிவம் தூபே 37 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அதிகபட்சமாக ரன்கள் எடுத்தாலும், தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதன் மூலம் 2010ல் ஆஸ்திரேலியாவிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த டி20 உலகக் கோப்பை தோல்வியை முறியடித்தது. இந்திய அணி எடுத்த 111 ரன்கள், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணி 2016ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்களிலும், 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் 111 ரன்களில் நியூசிலாந்துக்கு எதிராக எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராகும்.
லீக் சுற்றில் நான்கு தொடர் வெற்றிகள் பெற்றும், இந்தியாவின் பேட்டிங்கில் பல எச்சரிக்கை அறிகுறிகள் தெரிந்தன. இஷான் கிஷன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவும் நிலைமைக்கு ஏற்ப ஆடவில்லை. இதனால் நடுவரிசையும் சரிந்தது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களான மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ், கார்பின் போஷ் ஆகியோர் பிட்சின் தன்மையை திறம்படப் பயன்படுத்தினர். 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. இதன் மூலம் 823 நாட்களுக்கு பிறகு இந்திய அணி முதல் தோல்வியை டி20 உலககோப்பையில் தழுவியுள்ளது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்று நெருக்கடியாக மாறியுள்ளது.