பார்ல்: ரசிகர்கள் எனக்காக குரல் கொடுத்தவற்றை நானும் புகாராக பேச விரும்பவில்லை என்று இந்திய அணியின் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் விளாசிய சதம் முக்கிய காரணமாக மாறியது. சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதன் மூலமாக சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையே மாறிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

4வது ஓவரிலேயே களமிறங்கிய சஞ்சு சாம்சன், அவரின் சதத்தை 44வது ஓவரில் தான் எட்டினார். கிட்டத்தட்ட 40 ஓவர்கள் தொடர்ச்சியாக களத்தில் நின்று விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் வரும் நாட்களில் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர வீரராக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
8 ஆண்டுகளில் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்க போராடி வரும் சஞ்சு சாம்சனுக்கு, இறுதியாக மிகச்சிறந்த பிரேக் கிடைத்துள்ளது. இதுகுறித்து சஞ்சு சாம்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய கிரிக்கெட் வீரராக இருப்பதில் அதிக பிரஷர் உள்ளது. களத்திற்கு உள்ளே, களத்திற்கு வெளியில், மீடியா பிரஷர் ஆகியவற்றை எதிர்கொள்வது சிரமமான விஷயமாகும். அதனை கடந்து கிரிக்கெட்டிலும், ஃபார்மிலும் கவனம் செலுத்துவது இன்னும் அதிக சவால் நிறைந்தது.
ஆனால் நான் எனது கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் தான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும். ஆனால் எனது கிரிக்கெட்டில் என்ன முன்னேற்றம் செய்யய வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இத்தனை நாட்கள் எனது தோல்விகள், தேர்வில் புறக்கணிக்கப்பட்டது உள்ளிட்டவை பற்றி எனக்காக மக்கள் சொல்லியதை போல் நானும் புகாராக கூற விரும்பவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக கேரளா அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் கடினமாக உழைத்து வருகிறேன். அதனால் எனது கட்டுபாட்டில் இருப்பதை பற்றி தான் கவனத்தில் வைத்துள்ளேன். அதன் மூலமாக என்ன சாதிக்க முடியுமோ, அதனை நிச்சயம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.