கவுஹாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்விவையை தழுவியதற்கு பயிற்சியாளர்கள் குழு தான் காரணம் என 1983 உலகக்கோப்பையை வென்ற பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அணி நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள தான் முயற்சி செய்கிறார்களே, தவிர அணிக்காக எதுவும் செய்யவில்லை என கடுமையாக சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதிய பதிவில், இந்தியாவில் ஒட்டுமொத்த யுத்திகளும் மிகவும் பலவீனமாக இருக்கின்றது. இது போன்ற ஆடுகளத்தில் ஒரு முனையில் பவுலர்கள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். மறுமுனையில் ஆக்ரோஷமாக பவுலர்களை பயன்படுத்த வேண்டும். பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா போன்ற வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் நமது பயிற்சி குழுவில் இருப்பவர்கள் என்ன செய்ய தெரியும்? மோர்னே மோர்க்கலுக்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஏதாவது சொல்லித் தர முடியுமா? நான் பேட்டிங் பயிற்சியாளர் குறித்து பேசவே தேவையில்லை. இதற்கெல்லாம் பிசிசிஐ தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தற்போது அணியில் இருக்கும் பயிற்சி குழுவினர் அனைவருமே தங்களுடைய பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவிர அணிக்கு எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை.
ஆனால் கம்பீர் இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். தோல்வியை தழுவிய உடன் ஆடுகளம் மீது பழியை சுமத்தாமல் அவர் பொறுப்பை எடுத்துக்கொண்டு பேசினார். அவர் பேசியதில் பல விஷயம் சரியானது இல்லை என்றாலும்,பொறுப்பை எடுத்துக் கொண்டார். இதேபோன்று பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரான கங்குலியும் ஆடுகளப் பராமரிப்பாளரை பாதுகாத்து பேசினார்.
மேலும் ஷமியை தேர்வு செய்யாதது குறித்தும் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதையும் நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். ஷமி போன்ற ஒரு வீரருக்கு விடை பெறுவதற்காகவது ஒரு தொடரில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்து இருக்கின்றார். கடந்த ஆண்டுதான் நியூசிலாந்து நமது சொந்த மண்ணில் பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை வென்றது.
தற்போது அதே தவறை நாம் திரும்பவும் செய்கின்றோம். இதன் மூலம் நமக்கு சரியான புரிதல் இல்லை என்பதை தெரிகிறது. நமது வீரர்கள் திறன் பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதுவும் தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளருக்கு இதைப் பற்றி தெரியவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு பயிற்சியாளராக இவ்வளவு ஆண்டுகள் அணியுடன் இருக்கும் போது ஒவ்வொரு வீரர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. சீனியர்கள் இருக்கும்போதே இளம் வீரர்கள் வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் சீனியர்களை துரத்திவிட்டு இளம் வீரர்களை வளர்ப்பது என்பது சரியானது அல்ல. முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியே இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துதான் விளையாடுகிறார்கள். ஆனால் நாம் நான்கு ஸ்பின்னர் வைத்து விளையாடுகிறோம். இதன் மூலம் எந்த வீரரை பயன்படுத்துவது என்ற குழப்பம் கேப்டனுக்கு ஏற்படும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை வீரர்களுக்கு போட்டித் தொடர்பான புரிதல் இல்லை என்று பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.