விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வானளாவப் புகழ்ந்துள்ளார். குறிப்பாக, தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் என்று அவர் பாராட்டியுள்ளார்.
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால், இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்துப் பேசிய கம்பீர், "ருதுராஜ் கெய்க்வாட் ஒரு தரமான வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்தியா 'ஏ' அணிக்காக அவர் வெளிப்படுத்திய ஃபார்மைப் பார்த்துதான், இந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க விரும்பினோம்.
உண்மையில் அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். வழக்கமாக ஆடும் இடத்தில் இல்லாமல், வேறு இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் அணி 40 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியபோது, அவர் அடித்த அந்த சதம் மிகச் சிறப்பானது." என்று புகழ்ந்து தள்ளினார்.
கடைசிப் போட்டியில் சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்துப் பேசிய அவர், "ஜெய்ஸ்வாலிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை நாம் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இது அவருக்கு ஒரு ஆரம்பம் தான். அவருக்கும், ருதுராஜுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் தனக்கு மோதல் இருப்பதாக வந்த செய்திகளுக்கும் கம்பீர் முற்றுப்புள்ளி வைத்தார். "அவர்கள் நீண்ட காலமாக இந்திய அணிக்காக என்ன செய்து வருகிறார்களோ, அதையே இப்போதும் செய்கிறார்கள். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு அவர்களின் பங்களிப்பு எப்போதும் முக்கியமானது. அவர்கள் இதேபோலத் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று கம்பீர் கூறினார்.
டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு எழுந்த விமர்சனங்களுக்கு, ஒருநாள் தொடர் வெற்றி மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி மூலம் கம்பீர் ஆறுதல் தேடிக்கொண்டுள்ளார்.