சந்திகார்: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தற்போது சந்திகாரில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், அதற்கு நல்ல பயிற்சி களமாக இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கம்பீர் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

திறமை வாய்ந்த வீரர்களுக்கு கம்பீர் வாய்ப்பை மறுத்து வருவதாகவும், தனக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் முன்னாள் வீரர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்றும், முன்னாள் வீரர்கள் ஏதேனும் விமர்சனம் வைத்தால் அதனை கம்பீர் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்திகாரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த போது பயிற்சியாளர் கம்பீர், முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜை களத்துக்கு அளித்து மரியாதை அளித்தார். அப்போது வீரர்களிடம் உரையாற்றுமாறு கம்பீர் யுவராஜுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து வீரர்களிடம் யுவராஜ் சிங் சில நிமிடங்கள் உரையாற்றினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 2007 டி20 உலக கோப்பை இந்திய அணி வெற்றி பெற்றதற்கு யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று 2011 ஆம் ஆண்டிலும் யுவராஜ் சிங் தனது பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
கம்பீரின் இந்த நடவடிக்கையை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இதுவே தோனி மைதானத்திற்கு வந்திருந்தால் கம்பீர் இந்த மரியாதையை கொடுத்திருக்க மாட்டார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர். முதல் சர்வதேச ஆடவர் போட்டி இந்த மைதானத்தில் நடைபெறும் நிலையில் இங்கு யுவராஜ் சிங் பெயரில் ஒரு பார்வையாளர் மாடமும், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பெயரில் ஒரு பார்வையாளர் மாடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.