மும்பை: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது t20 போட்டி இன்று சந்திகாரில் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பயிற்சியாளர் கம்பீருக்கும் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றார்.
கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு இந்திய அணி 26 டி20 போட்டிகளில் 23 போட்டிகளில் வெற்றியை பெற்று இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா, இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.ஆனால் உலகக்கோப்பை இன்னும் ஒரு, இரு மாதத்தில் நடக்க உள்ளது.

இந்த சூழலிலும் நீங்கள் அணியின் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றினால் அது உங்களுக்கே ஆப்பாக மாறிவிடும். ஏற்கனவே கம்பீர் தலையை குறிவைத்து பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். இப்படி இருக்கும்போது டி20 உலக கோப்பைக்கு நடப்பு சாம்பியனாக செல்லும்போது உங்களுடைய முக்கிய வீரர் ஃபார்மில் இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் பிரச்சனை தான்.
முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார். அவர் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி 30, 40 ரன்கள் குறைவாக அடித்திருக்கும். இலக்கு 130 ரன்கள் ஆக குறைந்திருக்கும். அது நிச்சயம் எனக்கு ஒரு கவலை தான். இன்று பேட்டிங் வரிசையை மாற்றுவது இந்தியாவை பாதிக்காமல் இருக்கலாம். சூரியகுமார் தற்போது இந்தியாவின் சிறந்த டி20 கேப்டனாக இருக்கலாம். அவருடைய வெற்றி சதவீதம் 85 என்ற அளவில் இருக்கின்றது.
ஆனால் அடுத்த ஒன்பது போட்டிகளில் இந்தியா சில தோல்விகளை சந்தித்தால் நிச்சயம் அது அவருடைய பேட்டிங்கை மேலும் பாதிக்கும். அது மட்டுமில்லாமல் களத்தில் அவர் எப்படி அணியை வழிநடத்துகிறார் என்பதையும் பாதிக்க வைக்கும். உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியில் உள்ள ஸ்டார் வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும். அதற்கு பேட்டிங் வரிசையை மாற்றாமல் இருங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் டாப் 3 வீரர்களையாவது ஒரே இடத்தில் விளையாட வையுங்கள்.
சூரியகுமார் யாதவ் இந்தியாவில் சரியாக விளையாடவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபாரமாக விளையாடி இருக்கிறார். இதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடும் போது அவர் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் மும்பை அணிக்காக ஒரே இடத்தில் அவர் விளையாடுகிறார்.
டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால் முதல் ஆறு ஓவரில் விக்கெட் விழுந்தால் உங்களுடைய மூன்றாவது பேட்ஸ்மேன் தான் களத்திற்கு வர வேண்டுமே, தவிர அப்போது பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றக்கூடாது. சூர்யகுமார் போன்ற தலைமை வாய்ந்த வீரருக்கு அவருடைய பணி என்ன என்பதை புரிய வைக்க வேண்டும்.
முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட் விழுந்தாலும், நீ தான் களத்திற்கு வரப் போகிறாய் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.7,8 ஓவர்கள் கழித்து முதல் விக்கெட் விழுந்தால், அப்போது வேண்டுமானால், வலது கை, இடது கை காம்பினேசனுக்கு ஏற்ற வகையில் பேட்டிங் வரிசையை மாற்றலாம் என்றும் உத்தப்பா கூறியுள்ளார்.