டர்பன்: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் என்னை செல்ஃபோனில் அழைத்து ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச டி20 போட்டியில் சதம் விளாசியதை தொடர்ந்து, மீண்டும் இந்தப் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக தொடர்ச்சியாக 2 டி20 போட்டிகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஸ்பின்னர்களை எதிர்கொண்ட விதம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்த சஞ்சு சாம்சன், தொடர்ச்சியாக 2 போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் நேற்று ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டும் 27 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார்.
ஏற்கனவே ஐதராபாத் மைதானத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் சஞ்சு சாம்சன் ஸ்பின்னர்களுக்கு எதிராக 23 பந்துகளில் 64 ரன்களை விளாசி இருந்தார். இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், என்னை பொறுத்தவரை நாம் மோசமான ஃபார்மில் இருக்கும் போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அணி நிர்வாகத்தில் ஒருவர் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக நம் மீதான எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் மோசமான ஃபார்மில் இருக்கும் போது ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையே மொத்தமாக மாறிவிடும். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நான் மோசமான விளையாடினேன். அதன்பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் செல்ஃபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர்கள், ஸ்பின்னர்களுக்கு எதிரான உங்கள் ஆட்டம் தடுமாற்றமாக இருக்கிறது. அதனால் உடனடியாக கேரளாவில் உள்ள நல்ல ஸ்பின்னர்களை ஒருங்கிணைத்து, கடினமான பிட்ச்களில் பயிற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப பணியாற்றியதால், இப்போது சிறப்பாக செயல்பட முடிகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று முயற்சிப்பேன். ஆனால் தொடர்ந்து 4 முதல் 5 பந்துகளில் பவுண்டரி அடிக்க முடியாத போது ஏமாற்றம் அடைய மாட்டேன். ஏனென்றால் சில நேரங்களில் நமது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியும். சில நேரங்களில் நம் திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த இன்னிங்ஸில் எனது எண்ணங்களுக்கு ஏற்ப இன்னிங்ஸ் அமைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.