அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த ஒரு முக்கிய முடிவு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அணியின் துணை கேப்டனும், சிறந்த ஃபார்மில் இருப்பவருமான அக்சர் படேலை வெளியே அமர வைத்துவிட்டு, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு செய்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவு தோல்வியில் முடிந்துள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், இந்திய அணி அதே அணியுடன் களமிறங்குவதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்தார். அதாவது கடந்த போட்டியில் அக்சர் படேலுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார்.
இது குறித்து டாஸ் நிகழ்வின் போது பேசிய சூர்யகுமார், "அக்சர் படேலை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவுதான். ஆனால் எதிரணியின் பலத்தைக் கருத்தில் கொண்டு இந்த உத்தி சார்ந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று விளக்கம் அளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரில் குயின்டன் டி காக், டேவிட் மில்லர் உள்ளிட்ட இடது கை பேட்டர்கள் அதிகம் இருந்தனர். இடது கை பேட்டர்களுக்கு எதிராகப் பந்துவீச ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதால் அக்சர் படேலை விட வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஆனால், களத்தில் இந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. வாஷிங்டன் சுந்தரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் முழுமையாகப் பயன்படுத்தவும் இல்லை. 7-வது ஓவரில் பந்துவீச வந்த சுந்தர், அந்த ஓவரில் 11 ரன்களை வாரி வழங்கினார். அவருக்குப் பிறகு வந்த வருண் சக்கரவர்த்தியும் ரன்களைக் கொடுத்ததால் இந்திய அணி நெருக்கடிக்குள்ளானது. மீண்டும் 14-வது ஓவரில் அழைக்கப்பட்ட சுந்தர் 6 ரன்களைக் கொடுத்தார். மொத்தம் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 17 ரன்களைக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
பந்துவீச்சில் சோபிக்காத சுந்தர், பேட்டிங்கிலும் ஏமாற்றத்தையே அளித்தார். ஐந்தாவது வரிசையில் பேட்டிங் செய்யப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார். அந்த நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் இருந்தும், 11 பந்துகளைச் சந்தித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது அணியின் ரன் வேகத்தைப் பாதித்தது.
சிறந்த ஆல்ரவுண்டரான அக்சர் படேல் அணியின் துணை கேப்டனாக இருந்தும், அவரைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக வெளியே அமர வைத்திருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத் அக்சர் படேலின் சொந்த மைதானம் ஆகும். அங்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தரை வைத்துச் செய்யப்பட்ட இந்தச் சோதனை முயற்சி தோல்வியடைந்ததால், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.