மும்பை : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகனஸ்பர்கில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

டி20 தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் ஒன் பவுலராக விளங்கும் ரவி பிஷ்ணாய்க்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார். இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நான் நிச்சயமாக ரவி பிஷ்னாய்க்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கி இருப்பேன்.
ஏதேனும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் சேர்த்து இருக்கலாம். இடது கை சுழற் பந்துவீச்சாளரும் வலது கை சுழற் பந்துவீச்சாளரும் அணியில் இருந்தால் அது நிச்சயம் சிறந்த தாக்குதல் உடைய வாய்ப்பை உங்களுக்கு கொடுக்கும். ஆனால் இந்திய அணி எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனை வைத்து விளையாடுவது எனக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்திருக்கிறது.
பவர் பிளேவில் உங்களுக்கு அதிக விக்கெட் எடுக்கக்கூடிய வீரர் யார்? அது உங்களுடைய லெக் ஸ்பின்னர்தான். வேகப்பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற பேட்டிங் வரிசையில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுவார்கள். அதுவும் ஜோகனஸ்பர்க் போன்ற ஆடுகளங்களில் நீங்கள் ரவி பிஷ்னாயை சேர்த்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர வைக்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்தது. இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்றால் நீங்கள் தொடர் நாயகன் விருதை வாங்க கூடாது என நினைக்கிறேன். அப்படி அந்த விருதை வாங்கினால் அதிரடியாக நீங்கள் நீக்கப்பட அதுதான் முதல் தகுதியாக இருக்கும் என்றும் கம்பீர் கிண்டல் செய்தார்.