மும்பை: இந்திய டி20 அணியில் அடுத்தடுத்து சதம் அடித்து சாதனை செய்த சஞ்சு சாம்சன், தனது சிறப்பான ஆட்டத்துக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன வார்த்தைகளும் முக்கிய காரணம் என கூறி இருந்தார். சமூக வலைதளங்களிலும் கடந்த காலங்களில் கம்பீர், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசியதை பலரும் பகிர்ந்து வந்தனர்.
ஆனால், சஞ்சு சாம்சனின் ஆட்டத்துக்கு எந்த வகையிலும் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காரணம் இல்லை என முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏ பி டிவில்லியர்ஸ் கூறி இருக்கிறார். சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக இந்திய அணியில் சரியான வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட ஒன்று, இரண்டு வாய்ப்புகளிலும் அவர் சரியாக ரன் குவிக்காமல் ஏமாற்றம் அளித்து வந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் தொடர்களுக்கு நடுவே நடைபெற்ற இரண்டு டி20 தொடர்களில் அவருக்கு துவக்க வீரராக ஏழு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் அவர் விளையாடினார். அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்காத அவர் மூன்றாவது போட்டியில் தனது முதல் சர்வதேச டி20 சதம் அடித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் அவர் 111 ரன்கள் அடித்து இருந்தார்.
அதன் மூலம் இந்திய டி20 அணியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்தார். அடுத்து தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் துவக்க வீரராக இடம் பெற்ற சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் சதம் அடித்து மேலும் பல சாதனைகளை செய்தார்.
இந்த போட்டியில் 107 ரன்கள் அடித்த அவர் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். இந்த சாதனைகளுக்கு பின் பேசிய சஞ்சு சாம்சன், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த ஆதரவு மற்றும் அவர்கள் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறி இருந்தார்.
அவர் பெருந்தன்மையாக இவ்வாறு கூறி இருந்தாலும் எந்த வகையிலும் பயிற்சியாளர்கள் யாரும் சஞ்சு சாம்சனின் வளர்ச்சிக்கு காரணம் இல்லை என ஏ பி டிவில்லியர்ஸ் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் பேசி இருக்கும் பதிவில், "சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்வுக் குழுவினர் அவரை அனைத்து விதமான கிரிக்கெட் அணிகளிலும் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன். அவர் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடக் கூடிய வீரர்." என்றார்
மேலும், "சஞ்சு சாம்சன் உலகெங்கிலும் எந்த சூழ்நிலையிலும் வெற்றிகரமாக ஆடக்கூடிய சிறப்பான வீரர். அவரது அற்புதமான பேட்டிங் செயல்பாட்டில் பயிற்சியாளர் குழுவினருக்கு பங்கு இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், மோர்னே மோர்கல் மற்றும் ரையன் டென் ஆகியோரை நான் அவமரியாதை செய்யவில்லை. ஆனால், சஞ்சு சாம்சன் மிகவும் முதிர்ச்சி அடைந்து விட்டார். இனி தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை அவர் தாமாகவே உணர்ந்து இருக்கிறார்." என்றார்.