மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்தது. அதற்கு முன்பு கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தடுமாறி வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பெரிய வெற்றிகளை இந்தியா பெறுவதில்லை. இதனால் பயிற்சியாளர் கம்பீர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ரவி சாஸ்திரி, கவுஹாத்தியில் நடந்ததை பாருங்கள்.

100 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் நாம் இருந்தோம். ஆனால் 13 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நமது அணி ஒன்றும் மோசமான அணி கிடையாது. நமது வீரர்களிடம் பல திறமை இருக்கின்றது. வீரர்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்.
நீங்கள் கிரிக்கெட் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நேரத்தில் இருந்து சுழற் பந்துவீச்சை நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக நான் கம்பீரை பாதுகாத்து பேசுகிறேன் என்று அர்த்தம் கிடையாது. 100% அவரும் தான் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதே பிரச்சனை நான் பயிற்சியாளராக இருந்தபோது நடந்தால் முதல் ஆளாக இந்த தோல்விக்கு நான் பொறுப்பு எடுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அதேசமயம் அணியில் ஆலோசனை கூட்டத்தில் எந்த ஒரு வீரர்களையும் சும்மா விட்டு இருக்க மாட்டேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றி சதவீதம் 65 ஆக இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையை வென்றது. மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக ரவி சாஸ்திரி அதே சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 42 மாதங்களாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 14 மாதத்தில் இந்தியாவில் வெறும் இரண்டு டெஸ்ட் தொடரை மட்டும்தான் வென்றுள்ளது. அது ஒன்று வங்கதேசத்துக்கு எதிராகவும் இன்னொன்று வெஸ்ட் இண்டீஸ் எதிராகவும் ஆகும்.