மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மாறி மாறி ஒரு விசயத்தை பேசுவதாக முன்னாள் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் கம்பீரை போட்டு பொளந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவிடம் பார்டர் கவாஸ்கர் டிராபியை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இங்கிலாந்தில் 2-2 என்ற டிரா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், தற்போது தென்னாப்பிரக்கா தொடர் தோல்வி மூலம் சரிவை கண்டு வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சடகோபன் ரமேஷ், "இந்த தேவையற்ற சாதனைகள் அனைத்தும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன. அவர் இதற்கெல்லாம் பொதுவான காரணமாக இருக்கிறார். இந்தியாவிற்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் தேவையில்லை என்று கூறிய கம்பீர், தலைமைப் பயிற்சியாளராக ஆன பிறகு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களையே கோரினார்."
"ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்தவில்லை என்றால் அது இந்தியாவிற்கு இழப்பு என்று பல வருடங்களுக்கு முன் அவர் கூறினார். ஆனால் அவரது பதவிக்காலத்தில்தான் ரோஹித் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இனி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை"
"இந்திய அணி ரவி சாஸ்திரி மற்றும் கோலி, பின்னர் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இரண்டு முறை WTC இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. அப்போது கோப்பையை இழந்ததால் ஒரு வலி இருந்தது. ஆனால் இப்போது WTC இறுதிப் போட்டிக்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தெரிகிறது."
"கடந்த ஆண்டு முதல் டெஸ்டில் நியூசிலாந்து இந்தியாவை வென்றபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. ஆனால் அது பல அதிர்ச்சிகளில் முதல் அதிர்ச்சி மட்டுமே. நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் தொடரை இழந்ததன் மூலம் இந்தியா ஒரு தேவையற்ற சாதனையைப் படைத்தது."
"பிறகு, பத்து ஆண்டுகளாக இருந்த BGT கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைத்தோம். இப்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா இந்தியாவில் இந்தியாவை வென்றது, அதுவும் ஆதிக்கம் செலுத்தும் விதமாக வென்றுள்ளது.அதுமட்டுமின்றி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தோற்றோம்" என்று ரமேஷ் குறிப்பிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தோல்வி இந்தியாவை 2025-27 WTC தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்தியாவின் வெற்றி சதவீதம் வெறும் 48.15 ஆக உள்ளது.