மும்பை: கவுதம் கம்பீர் ஒன்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிடையாது என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்திருக்கிறார். கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. அண்மையில் கூட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது.
இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், கம்பீர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில், என்னை கேட்டால் தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் பயிற்சியாளர் என்ற பொறுப்பே இல்லை என்று தான் சொல்வேன்.

கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது. அவர் இந்திய அணியின் மேலாளராக வேண்டுமானால் இருக்கலாம். நான் பயிற்சியாளர் பற்றி பேச வேண்டும் என்றால், பள்ளிகல்லூரியில் எங்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த நபர்களைப் பற்றி தான் பேச வேண்டும்.
அவர்கள் தான் உண்மையில் பயிற்சியாளர்கள். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அல்லது ஸ்பின்னருக்கு நீங்கள் எப்படி சொல்லித் தர முடியும்? ஒரு ஸ்பின்னருக்கு இல்லை விக்கெட் கீப்பருக்கோ கம்பீர் எவ்வாறு சொல்லித்தர முடியும்? எனவே வீரர்களை நிர்வகிப்பது தான் மிகவும் முக்கியம். அணியின் மேலாளராக நீங்கள் வீரர்களை ஊக்கப்படுத்தி உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம் இளம் வீரர்கள் உங்களைப் பார்த்து பின் தொடர்வார்கள். பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான். இன்னும் உன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறி, அதன் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை. அதற்கு பதிலாக யார் சரியாக விளையாடவில்லையோ அவர்களுடன் விருந்துக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக நாம் நமது செயல்பாடுகளை மட்டும் கவனிக்கக்கூடாது. ஒட்டுமொட்ட அணியும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.