சண்டிகர்: "நீங்க தொடர்ந்து 21 முறை டக் அவுட் ஆனாலும் நான் உங்களை அணியை விட்டு நீக்க மாட்டேன்" என்று சில தொடர்களுக்கு முன் வாக்குறுதி கொடுத்த கௌதம் கம்பீர், இன்று சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

துணை கேப்டன் சுப்மன் கில் அணிக்குத் திரும்பியதால், ஓப்பனிங் இடத்தில் அபிஷேக் சர்மாவுடன் கில் களமிறங்கினார். மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லாமல் போனது. ஒரு டக் அவுட் கூட ஆகாத நிலையில், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சனின் நிலைமை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் விளையாடிய அவர், ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தது உட்பட மொத்தம் 233 ரன்களை விளாசித் தனது ஃபார்மை நிரூபித்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட்டதைத் தொடர்ந்து, ரசிகர்கள் கௌதம் கம்பீர் முன்பு சஞ்சு சாம்சனிடம் கூறிய ஒரு பழைய விஷயத்தைத் தோண்டி எடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்திய 'குட்டி ஸ்டோரிஸ்' நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் பேசிய வீடியோ அது.
அதில் சஞ்சு பேசுகையில், "நான் ஒருமுறை டிரஸ்ஸிங் ரூமில் சோகமாக அமர்ந்திருந்தேன். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்று கவலையில் இருந்தேன். அப்போது என்னிடம் வந்த கௌதம் பாய் (கம்பீர்), 'அதனால் என்ன? நீ தொடர்ந்து 21 முறை டக் அவுட் ஆனாலும் நான் உன்னை அணியிலிருந்து நீக்க மாட்டேன்' என்று நம்பிக்கை கொடுத்தார்," என்று கூறியிருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள், "அன்று டக் அவுட் ஆனாலும் பரவாயில்லை என்றவர், இன்று சஞ்சு சாம்சன் ரன் அடித்தும் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? பயிற்சியாளரானதும் அந்த வாக்குறுதி எல்லாம் மறந்துவிட்டதா?" என்று சமூக வலைதளங்களில் கம்பீரை வறுத்தெடுத்து வருகின்றனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரின் மீதமுள்ள 4 போட்டிகளிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.