கொல்கத்தா: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி இன்னிங்ஸில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்தியா 93 ரன்களில் சுருண்டது.
இதற்கு காரணம் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பயிற்சியாளர் கம்பீர், நாங்கள் இந்த போன்ற ஆடுகளத்தை தான் கேட்டோம் என்றும் ஆடுகள பராமரிப்பாளர் மீது எந்த தவறும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் மோசமாக இருக்கிறதோ இல்லை நன்றாக இருக்கிறதோ 124 ரன்கள் என்ற இலக்கை கண்டிப்பாக வேண்டும். எங்கள் அணி வீரர்களுக்கு திறமை இருக்கிறது.
ஆனால் அனுபவம் இல்லை. எங்கள் வீரர்கள் அனைவரும் இளைஞர்கள் அவர்களுக்கு பந்தை எப்படி தடுத்து ஆடுவது, எப்படி பொறுமை பார்த்து ஆடுகளத்தின் நேரத்தை செலவிடுவது என்பது பற்றி தெரியவில்லை.
போகப் போக அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த போட்டியில் கூட நாங்கள் கில்லை இழந்துவிட்டோம். அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ஆடுகளங்களில் இரண்டு பார்ட்னர்ஷிப் சேர்த்து விளையாடி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.
30 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப்பை 60 ரன்கள் உயர்த்த வேண்டும். இதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றி இருக்கிறது. இதுபோன்ற இலக்கை தொடும்போது பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். நாங்கள் இதே ஆடுகளத்தை தான் கேட்டோம். ஆடுகளப் பராமரிப்பாளர் எங்களுக்கு கேட்ட மாதிரி நல்ல ஆடுகளத்தை கொடுத்திருக்கின்றார்.
இது போன்ற ஆடுகளத்தில் விளையாடி பயிற்சி செய்ய விரும்புகின்றோம். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டத்தில் ஸ்பின்னர்களை விட வேகப்பந்துவீச்சாளர்கள் தான் அதிக விக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்று கம்பீர் கூறினார். கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மேலும் கம்பீரின் கூற்றும் தவறாகும். வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற் பந்துவீச்சாளர்கள் தான் அதிக விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.