கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக இழந்து படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை இந்திய அணி இழந்துள்ளது.
ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக பயிற்சியாளர் கம்பீர் இழந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் அதேபோல் ஒரு தோல்வியை இந்தியா சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் கவுஹாத்தியில் இந்தியா தோல்வி அடைந்த பிறகு செய்தியாளர்களை கம்பீர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நான் பதவியில் இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும். நான் இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். எனக்கு இந்திய கிரிக்கெட் தான் முக்கியம். நான் முக்கியம் கிடையாது. நான் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தோம்.
சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றினோம். ஆசிய கோப்பையை வென்றோம். இந்த அணி என்பது இளம் வீரர்களைக் கொண்டது. தற்போது பாடங்களை கற்று வருகிறது. இந்த தோல்விக்கு அனைவரும் தான் பொறுப்பு. என்னிடமிருந்து தொடங்கி அனைவரும் மீதும் தவறு இருக்கின்றது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறந்த முறையில் விளையாட வேண்டும்.
95 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்த நிலையில் 122 ரன்னுக்கு ஏழு விக்கெட் என்று மாறுவதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இல்லை யார் மீதும் நான் விமர்சனமும் செய்ய விரும்பவில்லை. அனைவரும் மீதும் தவறு இருக்கிறது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் இதுவரை யார் மீதும் பழி சுமத்தியது கிடையாது.
இனிமேலும் நான் அதை தான் செய்யப் போவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் விளையாட திறமை வாய்ந்த வீரரும், அட்டகாசமான வீரர்களும் எங்களுக்கு தேவையில்லை . கடினமான கேரக்டர் மற்றும் கொஞ்சம் திறமை இருந்தாலே அவர்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல வீரராக வர முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் க்கு அதிக முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனால் தனிப்பட்ட ஒருவரையோ, இல்லை வேறு எந்த ஒரு வீரர் மீதும் பழி சுமத்துவது சரி கிடையாது என்று கம்பீர் கூறியுள்ளார்.