மும்பை: நாட்டில் நடைபெறும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக மாறிய பின்பு ஒரு நிலைப்பாடும் எடுக்கும் நிகழ்வுகளை நாம் அரசியலில் தினமும் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் இன்று கம்பீர் செய்து வருகிறார்.
இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி சதம் சதமாக அடித்து வந்தார். ஆனால் இதில் தேவையில்லாமல் டி20 அணிக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவதில்லை. இதனால் பயிற்சியாளர் கம்பீரை பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பு கம்பீர் வெறும் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து இருந்திருக்கிறார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தென்னகத்தில் உருவாகியுள்ள இந்த நட்சத்திரம் நிலவின் தென் பகுதியில் கூட பேட்டிங் செய்யும் திறமையை உடையவர். விக்ரம் ரோவரில் இடம் இருந்தால் சஞ்சு சாம்சனை அழைத்து செல்ல முடியுமா என்று நான் யோசித்து வருகின்றேன். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்தது எல்லாம் அற்புதமான விஷயம் என்று கம்பீர் பாராட்டி இருக்கிறார்.
இதேபோன்று இன்னொரு ஒரு பதிவில், கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரர்கள் பற்றி பேசுவது எனக்கு எப்போதுமே பிடிக்காது. ஆனால் ஒருவரின் திறமையை பார்த்து பாராட்டினால் தற்போது இந்தியாவில் இருக்கும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். என்னை கேட்டால் உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் நம்பர் நான்காவது வீரராக விளையாட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில் அது எப்படி பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் இடம் கிடைப்பதில்லை. இது விந்தையாக இருக்கின்றது என்று கம்பீர் பதிவிட்டுள்ளார். பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பு சஞ்சு சாம்சனுக்காக சில்லறைகளை சிதறவிட்ட கம்பீர், தற்போது பதவிக்கு வந்தவுடன் அவரை அணியை விட்டு நீக்கி வைத்திருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். இது வேற வாய், அது வேற வாய் என்றும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு கம்பீரை கிண்டல் அடித்து வருகின்றனர்.