சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை நேருக்கு நேர் பார்ப்பதைக் கூடத் தவிர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு கை குலுக்கும் போது, கம்பீர் நடந்து கொண்ட விதம் அவர் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நியூ சண்டிகரில் நடந்த போட்டியில் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முக்கியக் காரணம் அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த 11-வது ஓவர் தான்.
இந்தப் போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடுகளை (Wides) வீசி, மொத்தம் 13 பந்துகளை வீசினார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் வாரி வழங்கப்பட்டது. இதைப் பார்த்த போதே ஓய்வறையில் இருந்த கம்பீர், இருக்கையில் அமர முடியாமல் கோபத்தில் கொந்தளித்தார். ஆக்ரோஷமாக சைகை காட்டித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிந்த பிறகு, வழக்கம்போல இரு அணி வீரர்களும், பயிற்சியாளர்களும் வரிசையாக நின்று கை குலுக்கிக் கொண்டனர். அப்போது கம்பீர் ஒவ்வொரு வீரரிடமும் கை குலுக்கிவிட்டு வந்தார்.
வரிசையில் அர்ஷ்தீப் சிங் வந்தபோது, கம்பீர் அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டே, பெயருக்கு ஒரு கையை கொடுத்துவிட்டு வேகமாக நகர்ந்து சென்றார். அர்ஷ்தீப் சிங் முகத்தில் ஒருவித குற்றவுணர்ச்சி தெரிந்தாலும், பயிற்சியாளர் தன்னை கண்டு கொள்ளாததை அவர் உணர்ந்தார்.
இந்தச் சம்பவம் கேமராவில் தெளிவாகப் பதிவானது. இதைத் தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர். "ஒரு பயிற்சியாளர் வீரருக்கு ஆதரவாக இருக்க வேண்டும், இப்படி முகத்தைத் திருப்பிக் கொள்ளக்கூடாது," என்று சிலர் கூறி வருகின்றனர்". தொடர்ந்து ஒரே தவற்றைச் செய்யும் அர்ஷ்தீப் மீது கோபப்படுவது நியாயம் தான்" என்று சிலர் கம்பீருக்கு ஆதரவாகவும் பேசி உள்ளனர்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங்கில் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் செய்த சொதப்பலால் இந்தியா தொடரை 1-1 என சமன் செய்ய வேண்டியதாயிற்று. அடுத்த போட்டிக்கு முன்னதாக அர்ஷ்தீப் சிங் மற்றும் கம்பீர் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வருமா?