அகமதாபாத்: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டியின் போது, கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். போட்டியின் தொடக்க விழாவில் டி20 உலகக்கோப்பையை ஏந்தியபடி அவர் மைதானத்திற்குள் வந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இணைந்து சுந்தர் பிச்சை கோப்பையை அறிமுகம் செய்தார். அப்போது கவாஸ்கர் குறித்து சுந்தர் பிச்சை பகிர்ந்து கொண்ட பழைய நினைவுகள் அனைவரையும் நெகிழ வைத்தன.

போட்டியின் நடுவே வர்ணனையாளர் அறைக்குச் சென்ற சுந்தர் பிச்சை, அங்கு ரவி சாஸ்திரியுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், "சுனில் கவாஸ்கர் தான் எனக்கு எப்போதும் மிகப்பெரிய முன்மாதிரி. எனது சிறுவயதில் ஸ்போர்ட்ஸ்டார் இதழில் வரும் அவரது போஸ்டர்களைக் கிழித்து எனது அறை சுவரில் ஒட்டி வைத்திருப்பேன்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளை எனது தாத்தா மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து வானொலியில் வர்ணனையாகக் கேட்பேன். அப்போதிலிருந்தே கிரிக்கெட் மீது எனக்குத் தீராத காதல் உண்டு" என்று தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஒருவர், தன்னைத் தனது முன்மாதிரி என்று கூறியது குறித்து சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்தியா டுடே ஊடகத்திடம் பேசிய அவர், "நான் அவரை முன்பே சந்தித்திருக்கிறேன். அப்போதே அவர் தனது படுக்கையறையில் என் படங்களை ஒட்டி வைத்திருந்தது பற்றிக் கூறியிருக்கிறார்.
தொழில்நுட்ப உலகில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய ஒருவர், உங்களின் தீவிர ரசிகராகவும், நலம் விரும்பியாகவும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இருவரும் உலகக்கோப்பையைத் தூக்கிக்கொண்டு மைதானத்திற்குள் சென்றபோது, 'மார்ச் 8ஆம் தேதி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும்' என்று இருவரும் வேண்டிக் கொண்டோம்" என்று தெரிவித்தார்.
மதுரையில் பிறந்த தமிழரான 53 வயது சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் ஐசிசி தொடரின் ஒரு அங்கமாக இருப்பதால் இந்தப் போட்டியை நேரில் காண வந்திருந்தார். பின்னர் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் இணைந்து கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார். சுமார் 90,954 ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மைதானத்தில் குவிந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக சுந்தர் பிச்சை வந்திருந்த போதிலும், நேற்றைய போட்டி இந்திய அணிக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.