கவுஹாத்தி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், செனுரன் முத்துசாமி ஆட்டத்தால் இந்திய அணியின் நிலை தலைகீழாக மாறியது. முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் ஆதிக்கம் செலுத்துவது போல் தென்பட்ட இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்காவின் பின்வரிசை வீரர்கள் கடும் சவாலாக உருவெடுத்தனர். குறிப்பாக, செனுரன் முத்துசாமி மற்றும் கைல் வெரின் ஜோடி இந்தியப் பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணி, 300 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செனுரன் முத்துசாமி மற்றும் விக்கெட் கீப்பர் கைல் வெரின் ஆகியோர் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

நிதானமாகவும் அதே சமயம் உறுதியாகவும் விளையாடிய செனுரன் முத்துசாமி, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு அரைசதம் அடித்தார். தற்போது அவர் 151 பந்துகளில் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்குச் சிறப்பான ஒத்துழைப்பு அளித்த கைல் வெரின் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 88 ரன்களைச் சேர்த்தது. அதன் பின் தொடர்ந்து ரன் குவித்த முத்துசாமி சதம் அடித்தார். மார்கோ ஜான்சென் அரைசதம் அடித்தார். இவர்களது ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி 420 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களிலுமே எந்த அணியும் 200 ரன்களைத் தாண்டவில்லை. பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே அதில் மேலோங்கி இருந்தது. ஆனால், கவுஹாத்தி ஆடுகளம் அதற்கு நேர்மாறாக உள்ளது. இங்கு தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸிலேயே 300 ரன்களைக் கடந்துவிட்டது. இது ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருப்பதையே காட்டுகிறது.
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை நெருங்கினால், அது இந்திய அணிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பதால், இந்திய அணியும் தனது முதல் இன்னிங்ஸில் குறைந்தது 400 ரன்களையாவது குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.