மும்பை: தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கடுமையாக சாடிருக்கிறார். இது போன்ற ஆடுகளத்தை பயன்படுத்தினால் டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்ல சாவும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல இறந்து வருகிறது. முதலில் இதற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் எஞ்சி இருக்க ஒன்றுமே இல்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்துமே முடிந்து விட்டது. இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எல்லாம் பிரமாதமாக இருக்கின்றது.

அங்கு ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் பாராட்டுகிறோம். நமது வீரர்கள் அங்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதுதான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள். எப்போதுமே விறுவிறுப்பையும், திரில்லையும் வீரர்களின் செயல்பாடுகளையும் கொண்டதாகும்.
ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது. ஆடுகளம் மிகவும் மோசமாக செயல்படுகிறது. நீங்கள் பந்து வீசும் போது எதிர்பாராத விதமாக வந்து திரும்புகிறது. இது எப்படி விளையாட வேண்டும் என பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், உங்களுடைய பேட்டிங் டெக்னிக் சிறப்பாக இருந்தாலும் இந்த ஆடுகளத்தில் விளையாட முடியாது. அவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கூட இந்த ஆடுகளத்தில் ரன்கள் சேர்க்காமல் ஆட்டம் இழந்து விடுவார்கள்.
ஒரு பந்து நன்றாக செயல்படுகிறது. இன்னொரு பந்து பவுன்ஸ் குறைவாக இருக்கிறது. அடுத்த பந்து கணிக்கவே முடியாமல் திரும்புகிறது. அடுத்த பந்தில் நீங்கள் ஆட்டம் இழந்து விடுகிறீர்கள். இங்கே திறமை என்பது முக்கியமே கிடையாது. ஆடுகளம் தான் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானா? தோல்வியை பெற வேண்டுமா என முடிவு செய்யும்.
இது புதிதல்ல. பல ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது என்று ஹர் பஜன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு இதேபோன்று ஆடுகளத்தை இந்தியா தயார் செய்து பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 15 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியும் தழுவியுள்ளது.