ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடர் 1க்கு1 என்று சமனாகியுள்ள நிலையில், இந்திய அணியில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வருண் சக்கரவர்த்தியை, களமிறக்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் 358 ரன்கள் என்ற பெரிய இலக்கை தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கரமாக துரத்தியது. இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்தில், பும்ரா இல்லாத போதும் சிராஜ் நம்பமுடியாத வகையில் சிறப்பாக இருந்தார். பும்ரா ஆடாத அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றது. ஆனால், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆட்டங்களை வெல்லக்கூடியவர்களைக் கண்டறிய வேண்டும். அது வேகப்பந்துவீச்சாகட்டும் அல்லது சுழற்பந்துவீச்சாளராகட்டும்."

"விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டறியுங்கள். குல்தீப் இருக்கிறார், ஆனால் மற்றவர்கள் யார்? வருண் சக்கரவர்த்தியை ஒருநாள் போட்டிகளிலும் கொண்டு வாருங்கள், அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருக்கிறார். எனவே அவரை ஒருநாள் போட்டிகளிலும் முயற்சி செய்யுங்கள்." என்று ஹர்பஜன் கூறினார்.
வருண் சக்கரவர்த்தி இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும், 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் முக்கியப் பங்காற்றினார். நான்கு போட்டிகளில் 19.00 சராசரி மற்றும் 4.75 எக்கனாமியுடன் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய ஹர்பஜன், "ஷமி எங்கே? ஷமி ஏன் ஆடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பிரசித் இருக்கிறார், அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் அவருக்கு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்."
"அவர்களை மெதுவாக ஒதுக்கி வைத்துவிட்டீர்கள். பும்ரா பும்ரா இல்லாமல் இது முற்றிலும் வேறுபட்ட பவுலிங் யூனிட் ஆக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் ஆட்டங்களை வெல்லும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில், அவர் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.அவர் தற்போது 2025-26 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் வங்காள அணிக்காக ஆடி வருகிறார்."
"இந்தியா 358 ரன்களை எடுத்தும் தோல்வியை தழுவியது சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதில் அவர்கள் பணியாற்ற வேண்டும். இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டையும் இழக்க கூடாது. இந்தத் தொடரையும் இழந்தால் ரசிகர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்படும். இந்தியா இதை அனுமதிக்கக் கூடாது," என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார். இந்த தொடரின் இறுதி ஒருநாள் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.