கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்திருக்கிறது. இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் பலரும் தடுமாறிய நிலையில் தனி ஆளாக நின்று ஹர்திக் பாண்டியா மட்டும் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கில், முதல் பந்திலே பௌண்டரி அடித்தார்.

எனினும் இரண்டாவது பந்தில் அவர் கேட்ச் ஆனார்.கேப்டன் சூரியக்குமார் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என எடுத்த நிலையில் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
திலக் வர்மா 32 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நடுவரிசையில் விளையாடிய அக்சர் பட்டேல் 23 ரன்கள் சேர்க்க இந்திய அணி தடுமாறியது. இந்த சூழலில் நடு வரிசையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார்.
சிக்சர், பவுண்டரி என தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அவர் பறக்க விட்டார். இதன் காரணமாக 25 பந்துகளில் ஹர்திக் பாண்டியா அரை சதம் கடந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற அவர் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடித்து 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
சிவம் துபே 9 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க, ஜித்தேஷ் சர்மா 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் லுங்கி கிடி 31 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிம்பாலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.