கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பேட்டிங்கில் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இந்திய அணியை கௌரவமான இலக்கிற்கு அழைத்துச் சென்றார்.
இதில் நான்கு சிக்ஸர், 6 பவுண்டரி அடங்கும். அது மட்டுமில்லாமல் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா இரண்டு ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச் சென்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது ஹர்திக் பாண்டியா ஜாம்பவான்களான கவாஸ்கர், மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கவாஸ்கர், மோஹிந்தர் அமர்நாத், விவிஎஸ் லக்ஷ்மன், அஜய் ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 10 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா அவர்களை சமன் செய்துள்ளார்.
இதேபோன்று டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள் பட்டியலில் சாஹல் சாதனையை ஹரிதிக் பாண்டியா சமன் செய்துள்ளார். இருவரும் கலா ஐந்து முறை இந்த விருதை வென்றுள்ளனர். இதைப் போன்று டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 50 ரன்கள், பந்துவீச்சில் ஒரு விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா மூன்று முறை செய்திருக்கிறார். இந்த சாதனையை யுவராஜ் சிங் மூன்று முறையும், சிவம்துபே இரண்டு முறையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, இரண்டு மாத காயத்திற்கு பின் இந்திய அணிக்கு திரும்பியிருக்கின்றேன். நாட்டிற்காக என்ன வேண்டுமானாலும், நான் செய்வேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதம் காலம் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டேன். என் மனதிற்கு நெருக்கமானவர்களை கூட பார்க்காமல் நாட்டிற்காக இதை செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.