மும்பை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய வீரர்களாக திகழ்வார்கள் என முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ஜதின் பராஞ்ச்பே தெரிவித்துள்ளார். இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், பராஞ்ச்பே அணி பலமாக இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளார்.
தற்போது நடைபெறும் டி20 உலகக் கோப்பையில், பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 155 ஸ்ட்ரைக் ரேட்டில் 85 ரன்கள் எடுத்ததோடு, 7.9 எகானமியுடன் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய பராஞ்ச்பே, "இந்த இந்திய அணியை முழுமையாய் வேறு நிலைக்குக் கொண்டு செல்பவர் ஹர்திக் பாண்டியா மட்டுமே. அவர் இல்லாமல், இந்த இந்திய அணி தற்போது இருக்கும் வலிமையில் பாதியாகவே இருக்கும்," என்று தெரிவித்தார்.
"கடந்த 12 மாதங்களில் ஹர்திக்கின் முன்னேற்றம், அவர் தனது ஆட்டத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது. வெளி உலகக் கருத்துக்களை அவர் ஒருபோதும் உள்வாங்கிக்கொள்வதில்லை," என்று பராஞ்ச்பே பாராட்டினார். "இந்தக் காரணங்களுக்காக நான் அவருக்கு ஒரு பெரிய ரசிகன். ஆகையால், ஹர்திக் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய திறவுகோல் ஆவார்,” என்றும் அவர் கூறினார்.
இந்திய அணிக்காக 133 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, 2158 ரன்கள் மற்றும் 110 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.ஹர்திக் பாண்டியாவைப் போலவே, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று பராஞ்ச்பே கூறியுள்ளார். "நான் பும்ராவை உற்று நோக்கினேன், அவர் மிகவும் ஸ்லிம் ஆகி, ஃபிட்டாக தெரிகிறார். இது பும்ரா போன்ற வீரர்களுக்கும், ஹர்திக் போன்ற ஆல்ரவுண்டர்களுக்கும் மிக முக்கியமான போட்டிகள்,” .
"ஆக, என் பார்வையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும்தாம் இந்திய அணியின் இரண்டு முக்கிய துருப்புச் சீட்டுகள். இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும், சிறப்பாகச் செயல்படுவதற்கும், இந்த இரு வீரர்களும் தங்களது உச்சகட்ட ஃபார்மில் இருக்க வேண்டும்,” என்றும் பராஞ்ச்பே தெரிவித்தார்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, தங்கள் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. போட்டி அட்டவணையின்படி, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளுடன் இந்த சுற்றில் களம் இறங்குகிறது.இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும்போது மற்ற அணிகளை விட ஒரு படி மேலே இருப்பதாக பராஞ்ச்பே கூறியுள்ளார். "எதிரணி எதுவாக இருந்தாலும், 'அபிஷேக் ஷர்மா’ அணியின் முக்கியமான ஆயுதமாக இருந்தும், தொடர்ச்சியாக மூன்று டக் அவுட்கள் செய்தபோதிலும், இந்திய அணி மிகவும் வலிமையாகத் தெரிகிறது,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.