மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் ஹர்திக் பாண்டியா விலகினார். அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விலகியுள்ளார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் எப்போது இருக்கும் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் அதுவரை இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஹர்திக் பாண்டியாவுக்கு என்சிஏ தரப்பில் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சை ஹர்திக் பாண்டியாவின் ஒவ்வொரு நாளின் செயல்பாடுகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால், இந்திஅய் டி20 அணிக்கு மீண்டும் ரோகித் சர்மாவை அழைக்க பிசிசிஐ தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்டதால், அவரையே தொடர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் கொடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்குள் தயாராகுவார் என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவடைந்த பின் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. டி20 உலககக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணி தரப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜனவரி மாதம் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.