அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த ஒரு சிக்ஸர், பவுண்டரி லைனில் இருந்த கேமராமேனை பலமாகத் தாக்கியது. இதை அறிந்த ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த உடன் செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ வைத்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அதிரடியாக ஆடினார். அவர் அடித்த 5 சிக்ஸர்களில் ஒன்று, நேராக பவுண்டரி லைனை நோக்கி புல்லட் வேகத்தில் பாய்ந்தது. அப்போது இந்திய அணியின் வீரர்கள் இருந்த பகுதியை படம் பிடித்துக்கொண்டிருந்த கேமராமேனின் தோள்பட்டையில் அந்த பந்து பலமாகத் தாக்கியது.

இதைப் பார்த்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங்கிற்கு தயாராக இருந்த சிவ துபே ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்டுகள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் திரும்பாத ஹர்திக் பாண்டியா, நேராக அந்த கேமராமேனிடம் சென்றார். "ரொம்ப வலிக்குதா பாஸ்?" என்று கேட்பது போல, காயம்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்த ஐஸ் பேக்கை வாங்கி, தானே அந்த கேமராமேனின் தோள்பட்டையில் வைத்து ஒத்தடம் கொடுத்தார்.
பின்னர் அவரை அன்போடு கட்டிப்பிடித்து, "தெரியாமல் நடந்துவிட்டது.. மன்னித்துவிடுங்கள்" என்று ஆறுதல் கூறினார். வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த கேமராமேன், ஹர்திக்கின் இந்த அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்து போனார்.
களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும், சக மனிதர்கள் மீது ஹர்திக் பாண்டியா கொண்டிருக்கும் அக்கறையை காட்டுவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்குகளைக் குவித்து வருகிறது.
இந்த போட்டியில் பேட்டிங்கில் 63 ரன்களும், பந்துவீச்சில் 1 விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 231 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.