ராஜ்கோட்: பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக, விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திரா சாஹல்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாஹலை, ஐசிசி தொடர்களில் மட்டும் சரியாக பிசிசிஐ கழற்றிவிட்டு வருகிறது. அதனை அண்மையில் முடிவடைந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களிலும் பார்க்க முடிந்தது.

டி20 ஸ்பெஷலிஸ்டான யுஸ்வேந்திரா சாஹல் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியதில்லை. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சாஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் யுஸ்வேந்திரா சாஹல், விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இன்று நடைபெற்று வரும் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஹரியானா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹரியானா அணி கேப்டன் அசோக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்பின் முதலில் ஆடிய பெங்கால் அணி 50 ஓவர்களில் 225 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஹரியானா அணியின் நட்சத்திர பவுலர் சாஹல் 10 ஓவர்களில் வெறும் 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார் சாஹல்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாஹல் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வழக்கத்திற்கு மாறாக சாஹல் தனது கூக்ளி பந்துகளை இன்னும் கொஞ்சம் தைரியமாக காற்றில் வீசுவது அவருக்கு பயனளித்து வருகிறது. இதனால் சாஹல் இதே பாணியிலான பந்துவீச்சை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.