விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய கையோடு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விமர்சகர்கள் மீது பாய்ந்துள்ளார். குறிப்பாக, டெஸ்ட் தொடர் தோல்வியின் போது தன்னை விமர்சித்த டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணி உரிமையாளருக்கு, "உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்" என்று காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இழந்ததால் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஒருநாள் தொடர் வெற்றி அவருக்குச் சற்று ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

டெஸ்ட் தொடர் தோல்வி குறித்துப் பேசிய கம்பீர், "எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் (கொல்கத்தா) நமது வழக்கமான கேப்டன் (சுப்மன் கில்) காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் தான் தோற்றோம் என்று ஒருத்தர் கூட எழுதவில்லை. அந்தப் போட்டியில் வெற்றியின் வித்தியாசம் வெறும் 30 ரன்கள் தான்.
சுப்மன் கில் இல்லாதது, அணி ஒரு மாற்றுக் காலத்தில் இருப்பது, அனுபவம் இல்லாதது பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் தோல்வியை மட்டும் பூதாகரமாக்குகிறார்கள்" என்று ஊடகங்கள் மீது பாய்ந்தார்.
சமீபத்தில் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், "டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தனி பயிற்சியாளர் தேவை" என்று ட்வீட் செய்திருந்தார். இது கம்பீரின் திறமையை சந்தேகிப்பதாக அமைந்தது.
இதற்குப் பதிலளித்த கம்பீர், "அது மிகவும் தவறான கருத்து. நாங்கள் எப்படி அவர்கள் விஷயத்தில் (ஐபிஎல் விவகாரங்களில்) தலையிடுவதில்லையோ, அதேபோல அவர்களும் எங்கள் விஷயத்தில் (இந்திய அணி நிர்வாகம்) தலையிடக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் பார்த்தால் நல்லது" என்று பெயர் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார்.
தொடர் தோல்விகள் மற்றும் பந்துவீச்சு சொதப்பல் குறித்துப் பேசிய அவர், "கடந்த 20 முறை டாஸ் தோற்றதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் பயிற்சியாளராக வந்த பிறகு, இப்போதுதான் முதல்முறையாக டாஸ் வென்றுள்ளோம். இந்தியாவில் இப்போது பனிப்பொழிவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ராய்ப்பூரில் 350 ரன்களை தடுத்து வெற்றி பெற முடியவில்லை என்று பவுலர்களைக் குறை கூறுகிறார்கள். ஆனால் பனிப்பொழிவு இருக்கும்போது பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலையைப் பார்க்காமல் விமர்சிக்கக் கூடாது" என்று தனது பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார். வெற்றிக்குப் பிறகும் கம்பீர் இவ்வளவு ஆவேசமாகப் பேசியது, டெஸ்ட் தோல்வியால் எழுந்த விமர்சனம் அவரை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதையே காட்டுகிறது.