கவுஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. 247 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது.
சேனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், வெர்ரையன் 1 ரன்னுடனும் ஆட்டத்தை தொடந்தனர். இந்த ஜோடி முதல் செஷனில் விக்கெட்டே விழாமல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் இருவரும் கொஞ்சம் அதிரடி காட்ட தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் உயர்ந்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சேதுரான் முத்துசாமி, தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் வெர்ரையன் 45 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று மார்க்கோ யான்சன் அதிரடி காட்டி இந்திய பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். ஏழு சிக்ஸர், 6 பவுண்டரி என 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார்.
கேசவ் மஹராஜ் 12 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்த பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க அணி பெரிய ஸ்கோர் குவித்தாலும் 151 ஓவரை அவர்கள் எதிர்கொண்டார்கள். தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ரன் குவிக்கும் வேகம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. இந்த தவறை இந்திய வீரர்கள் செய்யக்கூடாது. முதல் இன்னிங்சில் கொஞ்சம் அதிரடி காட்டி ரன்களை சேர்க்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவை விட கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும். முடிந்தவரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 650 முதல் 700 ரன்கள் குவிக்க வேண்டும். நான்காவது நாள் மதிய நேர உணவு இடைவேளை வரை இந்திய அணி விளையாடி விட்டு பின்னர் தென்னாப்பிரிக்காவை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றியை குறிவைத்து விளையாட வேண்டும்.ஒருவேளை இந்திய அணி தென்னாபிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட முடியவில்லை என்றால், இந்த போட்டி ஒன்று டிராவில் முடிவடையும். இல்லை என்றால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.