கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்தியா தென்னாப்பிரிக்காவை விட அதிக ரன்கள் அடித்து முன்னிலை பெற வேண்டும்.

ஆனால் தொடக்க வீரர் ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 58 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 95 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதனை அடுத்து களமிறங்கிய நடுவரிசை வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக சாய் சுதர்சன் 15 ரன்களில் வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரல் 11 பந்துகளை எதிர்கொண்டு டக்கவுட்டானார்.இதனால் பண்ட் களம் இறங்கி சிக்சர் அடித்து தனது கணக்கை தொடங்கினார். ஆனால் அவர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேனான நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 119 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் இந்திய அணி 290 ரன்களை தொட வேண்டும். ஆனால் தற்போது இந்தியா 119 ரன்கள் மட்டுமே அடித்துள்ளதால், இன்னும் 171 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது.
இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை தான் மூன்றாவது நாள் என்பதால் இன்னும் இந்த ஆட்டத்தில் நிறைய நாட்கள் எஞ்சி இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.