சென்சுரியன்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பிரசித் கிருஷ்ணாவை விடுத்து முகேஷ் குமார் தேர்வு செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்சுரியனில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நட்சத்திர வீரர் விராட் கோலி தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்ஸை சமாளிப்பதற்காக 18 யார்ட்கள் மட்டுமே உள்ள பிட்சில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக பார்க்கப்பட்டாலும், பவுலிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடர்ந்து விளையாடிய அனுபவம் கொண்டுள்ள முகமது ஷமி விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனால் அவரின் இடத்தில் பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் காயத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளார். ஒருவேளை ஒரே நாளில் 15 முதல் 20 ஓவர்கள் வரை வீச வேண்டிய சூழல் வந்தால், அவரால் செய்ய முடியுமா என்பது கேள்வி தான்.
ஒருவேளை நான் சொல்வதை தவறு என்று பிரசித் கிருஷ்ணா நிரூபித்தால் மகிழ்ச்சி தான். ஏனென்றால அவர் சரியாக விளையாடினால், நிச்சயம் இந்தியாவும் வெற்றி பெறும். இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா மற்றும் சிராஜ் தான் முதல் நிலை பவுலர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்பின் 3வது பவுலராக நான் முகேஷ் குமாரை தான் தேர்வு செய்வேன்.
ஏனென்றால் அவரால் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும் என்பதோடு, சரியான லைன் மற்றும் லெந்தில் வீசக் கூடிய பவுலர். அதேபோல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி இருப்பதால், அவர் பெரிய ஸ்பெல்லை வீசக் கூடிய அனுபவத்தை பெற்றுள்ளனர். ஒருவேளை நாள் முழுக்க பந்துவீசக் கூடிய தேவை ஏற்பட்டாலும், அவரால் நிச்சயம் பந்துவீச முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரில் யார் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.