கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவுகளை ஜாம்பவான் வீரரான ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். முதல் நாளில் இருந்தே பந்து திரும்பும் பிட்சை எப்படி கேட்டு வாங்கலாம் என்று கேள்வி எழுப்பிய அவர், தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 124 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதும், இந்திய அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடந்த ஓராண்டில் மட்டுமே இப்படியான எளித இலக்கை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வி அடைவது 3வது முறையாகும்.

அதேபோல் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின் சொந்த மண்ணில் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளை அடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்த பிட்சில் எந்த பிசாசோ, பேயோ இல்லை என்று கம்பீர் கூறி இருக்கிறார். இதுதான் எனக்கு புரியவில்லை. அப்படியென்றால், நல்ல பேட்டிங் டெக்னிக்கையாவது காட்டி இருக்க வேண்டாமா?
இப்படியான ஒரு பிட்சில் எப்படி விளையாட முடியும். அத்தனை பேட்ஸ்மேன்களும் டிஃபெண்ட் செய்ய முயன்று ஸ்லிப்பில் கேட்க் கொடுக்கின்றனர். அல்லது எல்பிடபிள்யூ ஆகி விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். தென்னாப்பிரிக்கா அணியிடம் அவ்வளவு வலிமையான பேட்டிங் வரிசை கிடையாது. இருந்தும் ஏன் இப்படியான பிட்ச் தயாரிக்கப்பட்டது.
மோசமான பிட்ச்சால் இந்திய பேட்ஸ்மேன்களின் டெக்னிக்கும் வெளி வந்துவிட்டது. அவர்களை விமர்சிப்பது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். இரு அணிகளும் சேர்த்து பவுமா மட்டுமே இந்த பிட்சில் தாக்கு பிடித்திருக்கிறார். 6 டெஸ்டில் 4ல் தோல்வி என்பது மோசமான ரெக்கார்ட். இத்தனைக்கும் அத்தனை இந்திய வீரர்களும் அணியில் உள்ளனர்.
இப்படியான ஒரு விக்கெட்டையே கேட்டோம் என்று கம்பீரே ஒப்புக் கொண்டிருக்கிறார். முதல் நாளிலேயே இருந்தே பந்து ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனை பல ஆண்டுகளாக செய்து மாட்டி இருக்கிறோம். ஆனாலும் தவறுகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்க மறுக்கிறது. இந்த பிட்சில் எல்லாமே தவறுதான். நான் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பவுலிங் செய்தால் கூட விக்கெட் கிடைத்துவிடும்.
இப்படியொரு பிட்சில் விளையாடியும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று பேசக் கூடாது. இரு அணிகளாலும் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றால், அது எப்படி நல்ல பிட்ச்சாகும்? கம்பீர் பேசுவதே அபத்தமானது. அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறுகின்றனர். கம்பீர் அழுத்தத்தில் இருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் இந்திய அணி அழுத்தத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.