ஜொகன்னஸ்பர்க்: பிங்க் ஜெர்சியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணியை 400 ரன்களுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தங்களின் சிந்தனையாக இருந்ததாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதல்முறையாக வென்றுள்ளார்.

கடந்த சுற்றுப்பயணத்தின் போது கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியை தென்னாப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தற்போது முதல் போட்டியிலேயே கேஎல் ராகுல் வென்று பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாடிய போட்டியில் இந்திய அணி முதல்முறையாக வென்று அசத்தியுள்ளது.
குறிப்பாக அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்ச்சியாக ஓவர்கள் கொடுத்து கேஎல் ராகுல் அட்டாக் செய்து கொண்டே இருந்தார். 4 ஓவர்களுடன் ஸ்பெல் முடிந்த சூழலில், அர்ஷ்தீப் சிங் கூடுதலாக சில ஓவர்களை வீசி விக்கெட்டை வீழ்த்தினார். சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் பேசுகையில், கடவுளுக்கும், இந்திய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் கேஎல் ராகுலுக்கும் நன்றி கூற வேண்டும். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. எனது ரோலை நான் மகிழ்ச்சியாக செய்ய தொடங்கி இருக்கிறேன். கேஎல் ராகுல் என்னிடம், நீ சரியான கம்பேக் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துள்ளேன்.
அக்சர் படேல், நான் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய 3 பேரும் இரவு உணவு சாப்பிடும் போது, பிங்க் ஜெர்சியில் தென்னாப்பிரிக்கா அணி எவ்வளவு அபாயகரமான அணி என்று ஆலோசித்து கொண்டிருந்தோம். எப்படியாவது 400 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் சிந்தனையாக இருந்தது. ஆனால் பிட்சில் உதவி கிடைத்ததால், எங்களின் திட்டத்தை எளிமையாக்கினோம். அதற்கேற்ப பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. ஆவேஷ் கானுக்கு பாராட்டுகள் செல்ல வேண்டும். ஏனென்றால் அவர் விக்கெட்டுகள் வீழ்த்தியதால், எனது பிரஷரும் குறைந்தது என்று தெரிவித்தார்.