டர்பன்: இந்திய அணிக்காக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய தருணத்திற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்ததாக நட்சத்திர வீரர் சம்சு சாம்சன் தெரிவித்துள்ளார். மேலும் மைதானத்தில் ஒரு பக்கமாக காற்று அதிகம் வீசியதாக கூறிய சஞ்சு சாம்சன், இந்திய அணி மிகச்சிறந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசினார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதேபோல் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரோஹித் சர்மாவுக்கு சிறந்த மாற்றாக சஞ்சு சாம்சன் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், எந்த பந்து வந்தாலும் அடிக்க வேண்டும் என்ற மூடில் தான் இருந்தேன். எந்த பந்திற்கும் இந்த ஷாட் அடிக்க வேண்டும் என்று தயாராகவில்லை. இயல்பான ஷாட்களையே ஆடினேன். ஒரு பந்து வீசப்படும் போது, அதனை பவுண்டரி அடிக்க முடியும் என்றால், ரிஸ்கை பார்க்காமல் ஷாட்டை விளையாட வேண்டும். எப்போதும் விளையாடப் போகும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
அதுதான் எனக்கு உதவியாக உள்ளது. இந்த மைதானத்தில் நிச்சயம் பிட்ச் நன்றாக இருக்கிறது. கூடுதல் பவுன்ஸ் இருக்கிறது. இந்தியாவில் இருந்து வருவதால், இந்த பிட்சை புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. அதேபோல் ஒரு பக்கம் மட்டும் அதிகளவில் காற்று வீசுகிறது. அதனை தென்னாப்பிரிக்கா பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்தி பந்துவீசினர். அவர்கள் செய்ததை இந்திய பவுலர்கள் கொஞ்சம் அப்படியே நகலெடுத்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
தற்போதைய பேட்டிங் ஃபார்ம் குறித்து அதிகம் சிந்தித்தால் நிச்சயம் எமோஷனலாகிவிடுவேன். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியான ஒரு தருணத்திற்காகவே காத்திருந்தேன். நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் கால்கள் தரையிலேயே இருக்க வேண்டும் என்று தெரியும். இந்திய அணி 202 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை பதிவு செய்துள்ளது. எங்களின் 80 சதவிகித திறமையை பயன்படுத்தி பவுலிங் செய்தாலே வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.