ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசுவேன் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என்று இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். இந்த சதம் விளாசியதற்காக கடவுளுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும் நன்றி கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த டி20 தொடர் இந்திய அணியின் இளம் வீரரான திலக் வர்மாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடைசி 2 டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி சதம் விளாசியதோடு, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி சென்றுள்ளார்.

இந்த டி20 தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடிய திலக் வர்மா 33, 20, 107* மற்றும் 120* என்று மொத்தமாக 280 ரன்களை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 4 கேட்ச்களையும் பிடித்து ஃபீல்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டிருக்கிறார். இதன் மூலமாக இந்திய டி20 அணியில் நம்பர் 3 பேட்டிங் வரிசையை திலக் வர்மா பிடித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற மகிழ்ச்சியில் திலக் வர்மா பேசுகையில், உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா வந்த போது, இதே மைதானத்தில் விளையாடினேன். அப்போது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினேன். இன்றைய ஆட்டத்தில் எனது இன்னிங்ஸ் கொஞ்சம் முக்கியமானதாக இருந்தது.
இந்த டி20 தொடரிலும் எனக்கு இந்த இன்னிங்ஸ் முக்கியமாக கருதுகிறேன். எனது திறமை மீது நம்பிக்கை வைத்து அடிப்படைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. களத்திலும் நிதானமாக அடிப்படையை தான் பின்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். நிச்சயம் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசுவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. அதனால் இந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
அதுவும் தென்னாப்பிரிக்கா மண்ணில் 2 சதமடிப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. இதற்காக கடவுளுக்கும், எனது கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக காயத்தில் அவதிப்பட்டு வந்தேன். அதன்பின் மீண்டு வந்த நான் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டு சதம் விளாசி இருக்கிறேன். அதற்காக தான் சதம் விளாசிய பின் வானத்தை நோக்கி கடவுளைக் கைக்காட்டினேன் என்று தெரிவித்துள்ளார்.