நவி மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷஃபாலி வர்மா, கடவுள் தன்னை அனுப்பியதாக கூறி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என சந்தேகிக்கப்பட்டு, இந்திய மகளிர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, ஓரம் கட்டப்பட்ட 21 வயது இளம் புயல் ஷஃபாலி வர்மா, விடாமுயற்சியும், கடின உழைப்பும், சிறிதளவு விதியும் சேர்ந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உலகத்தின் மிகப்பெரிய மேடையில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்குத் தேவையில்லை என்று ஓராண்டுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே ஷஃபாலி வர்மா, 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், மிகச்சிறந்த ஆல்-ரவுண்ட் ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி, தன்னைச் சந்தேகப்பட்ட அனைவருக்கும் தனது பேட்டாலும், பந்தாலும் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலில் பேட்டிங்கில் 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்த அவர், பின்னர் 7 ஓவர்கள் வீசி 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த அற்புதமான செயல்பாடு, அவருக்கு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் "ஆட்ட நாயகி" விருதைப் பெற்றுத் தந்தது.
வீரேந்தர் சேவாக்கின் மறு உருவம் என்று வர்ணிக்கப்பட்டவர் ஷஃபாலி. மகளிர் கிரிக்கெட்டில் அச்சமற்ற அதிரடி தொடக்க வீராங்கனை என்ற அரிய திறமையுடன் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தவர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்தில் நிலவிய சீரற்ற தன்மை, அவரை அணியிலிருந்து வெளியேற்றியது.
டி20 போட்டிகளுக்கு அவரது அதிரடியான 30, 40 ரன்கள் போதுமானதாக இருந்தது. ஆனால், ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீராங்கனையிடம் அதிரடியுடன், நிலையான ஆட்டமும் அணிக்குத் தேவைப்பட்டது. அந்த இடத்தில் பிரதிகா ராவல் என்ற வீராங்கனை நிலையாக ஆடி, ஸ்மிருதி மந்தனாவுடன் ஒரு அற்புதமான தொடக்க ஜோடியை அமைத்தார். பிரதிகா ரன்கள் குவிக்கக் குவிக்க, ஷஃபாலியின் கதவு கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதுபோலவே தோன்றியது.
கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் பிரதிகா ராவல் சதம் அடித்தபோது, அடுத்த சில வாரங்களில் தான் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்று ஷஃபாலி தன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், விதி வேறு ஒரு கதையை எழுதி வைத்திருந்தது. பிரதிகா ராவல் காயமடைய, அரையிறுதிப் போட்டிக்கு முன்பு அணியில் இணைந்தார் ஷஃபாலி. தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அவர் இரு கைகளாலும் பற்றிக்கொண்டார்.
"நான் முன்பே சொன்னேன், கடவுள் என்னை இங்கே ஒரு நல்ல காரியத்தைச் செய்ய அனுப்பியுள்ளார், அது இன்று நடந்துள்ளது. நாங்கள் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஷஃபாலி.
இறுதிப் போட்டியில், 30,000 ரசிகர்கள் தன் பெயரை முழங்க, பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஒவ்வொரு ஷாட்டிலும் மீண்டெழுந்த ஒரு வீராங்கனையின் வெறி தெரிந்தது. ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து கூட்டணியாக 104 ரன்கள் குவித்து, இந்தியாவின் பெரிய ஸ்கோருக்கு அசைக்க முடியாத அடித்தளமிட்டார்.
பின்னர், யாரும் எதிர்பாராத விதமாகக் பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்தினார். தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிப்போட்டிக்கு முன்பு வெறும் 14 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த ஷஃபாலி, கேப்டன் ஹர்மன்ப்ரீத் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார்.
52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த ஸூன் லூஸ் மற்றும் அபாயகரமான மரிசான் கேப் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கையே இந்தியாவின் பக்கம் திருப்பினார். அந்த விக்கெட்டுகளை வீழ்த்தியதும், கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் கைகளில் அவர் துள்ளிக் குதித்த தருணம், தன் கஷ்டங்களுக்கெல்லாம் கிடைத்த விடுதலையின் வெளிப்பாடாக அமைந்தது.