நவி மும்பை: இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த அணியும் படைத்திராத ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது ஹர்மன்ப்ரீத் கௌரின் பட்டாளம். ஆம், ஒரு உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த ஒரு அணி, கோப்பையை வெல்வது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஆண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்த சாதனை இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. 1992ஆம் ஆண்டு, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மூன்றுக்கும் மேற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு மீண்டெழுந்து கோப்பையை வென்றது. பின்னர், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இதேபோன்று சவால்களைக் கடந்து சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது, அந்தச் சாதனைப் பட்டியலில் இந்திய மகளிர் அணியும் இணைந்துள்ளது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்று, இந்தியா தொடரை நம்பிக்கையுடன் தொடங்கியது.
ஆனால், அதன் பிறகுதான் உண்மையான சவால் காத்திருந்தது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று பலமான அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அணியின் அரையிறுதி வாய்ப்பையே கேள்விக் குறியாக்கியது.
இந்தத் தொடர் தோல்விகளால் துவண்டுவிடாத இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்து, மீண்டும் போட்டிக்குள் வந்தது. வங்கதேசத்துடனான கடைசி லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
அரையிறுதியில், லீக் சுற்றில் தங்களை வீழ்த்திய, ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. அந்தப் போட்டியில் 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திருப்பியது. இறுதிப் போட்டியிலும், லீக் சுற்றில் தங்களை வீழ்த்திய மற்றொரு அணியான தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பழிதீர்த்து, கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி முதலில் ரன் குவித்தாலும் நடுவில் விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் லாரா 101 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இதை அடுத்து 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியை வென்றது.