நவி மும்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி , இன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், இந்த முறை கிரிக்கெட் உலகம் ஒரு புதிய சாம்பியனை வரவேற்கக் காத்திருக்கிறது. அதே சமயம், மழை இந்த இறுதிப் போட்டிக்கு வில்லனாக வர வாய்ப்பு உள்ளது. மழை குறித்த வானிலை அறிக்கையை காணலாம்.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வானிலை முன்னறிவிப்பின்படி, நவி மும்பையில் இன்று மதியம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டியின் தொடக்க நேரமான மதியம் 3 மணியளவில், மழைக்கான வாய்ப்பு 20 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 4 மணியளவில் இது 49 சதவீதமாகவும், மாலை 6 மணியளவில் 58 சதவீதமாகவும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளது. எனினும், மாலை 7 மணிக்கு மேல் மழையின் தீவிரம் குறையும் என்றும், அதன் பிறகு 20 சதவீதம் மட்டுமே மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்டம் தாமதமாகத் தொடங்கினாலும், ஓவர்கள் குறைக்கப்பட்டுப் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இறுதிப் போட்டிக்கு முந்தைய இரண்டு நாட்களாக (வெள்ளி மற்றும் சனி) மைதானத்தில் மழை பெய்ததால், இரு அணிகளும் முழுமையான பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, மழை குறித்த தகவல்கள் கவலையை அதிகரித்துள்ளது.
இறுதிப் போட்டிக்கு 'ரிசர்வ் டே' (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) போட்டி முழுமையாக நடைபெற முடியாத பட்சத்தில், ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடரும். எனினும், போட்டி நடுவர்களின் முதல் முன்னுரிமை, இன்று ஓவர்களைக் குறைத்தேனும் போட்டியை நடத்தி முடிப்பதாகவே இருக்கும். மழை பெய்ய வாய்ப்புள்ளதால், டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. இன்று கோப்பையை வென்று வரலாறு படைக்கப்போவது இந்தியாவா அல்லது தென்னாப்பிரிக்காவா என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.
ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பலரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிகரமாக எட்டி, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தது.
இந்த வெற்றி, 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற தருணத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம், தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.