மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா கேப்டனாகவும், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா ஏ அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வென்றுள்ள நிலையில், நாளை இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் விளையாடவுள்ளன.

இதற்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் துணைக் கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். தற்போது ரஜத் பட்டிதார் அணியிலேயே தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்க்கு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆயுஷ் பதோனி. நிஷாந்த் சிந்து ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அசத்திய ஸ்பின்னர் விப்ராஜ் நிகமிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபியில் அசத்தி வரும் மானவ் சுதார், கம்பீரின் ஃபேவரைட் பிளேயரான ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு முக்கியத்துவம் அதிகரித்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.