கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்திய அணி மூன்று நாட்களுக்குள் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் ஆடுகளத்தை நாங்கள் இவ்வாறு தான் கேட்டோம் என கம்பீர் கூறியிருந்தார். இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை கவுஹாத்தியில் தொடங்குகிறது. இந்தப் போட்டி குறித்து செய்தியாளர்களுடன் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஷிட்டான்சூ கோட்டக், ஆடுகளம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பழியை கம்பீர் எடுத்துக் கொண்டார்.

ஏனென்றால் ஆடுகள பராமரிப்பாளர்கள் பழியை எடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. இந்தியாவில் நாம் விளையாடும் போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் நாம் விளையாடுவதில் என்ன தவறு இருக்கிறது. ஒவ்வொரு நாடும் அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ, அந்த வகையில் தான் ஆடுகளத்தை தயாரித்துக் கொள்கிறார்கள்.
நாங்கள் எப்போதுமே டெஸ்ட் போட்டி சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக நான்கு அல்லது நான்கரை நாட்கள் நீடிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றோம். வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் இரண்டு நாட்களில் போட்டியில் எப்போதுமே இருக்கிறார்கள். ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் நடந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. முதல் நாளுக்கு பிறகு ஆடுகளம் கடுமையாக மாறி நொறுங்கியது என்று சொல்லலாம்.
இன்னும் சொல்லப் போனால் ஆடுகளப் பராமரிப்பாளர்களே அதை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு பந்து திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் முதல் இரண்டு நாட்களில் இவ்வாறு நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் பலரும் இங்கு கம்பீர் பற்றிய பேசுகிறார்கள்.
யாருமே பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை, பேட்டிங் பயிற்சியாளர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நாங்கள் எப்போதெல்லாம் தோல்வியை தழுவுகிறோமோ, அப்போதெல்லாம் கம்பீரை தான் அனைவரும் சாடுகிறார்கள். ஒருவேளை கம்பீர் மீது ஏதேனும் மறைமுக கோபம் இருப்பதால் இவ்வாறு செய்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.அது மிகவும் தவறு.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும் என்று நாங்கள் பேசி வருகிறோம். சிலர் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். சிலர் எப்போதும் களத்தில் பிஸியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் பேசுகிறோம். கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.